அட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை, டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று டிக்கோயா பட்டல்கல பகுதியில், வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில், காயமடைந்த சுமார் 34 பேர், உடனடியாக அருகிலுள்ள கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, இந்த விபத்தில் பலத்த காயமடைந்திருந்த அக்கரப்பத்தனை, வெவர்லி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த 66 வயதான டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பழனி லூகாஸ் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (02) உயிரிழந்தாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
