இலங்கையின் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை வெளிப்படைத் தன்மையுடனும் வினைத்திறனுடனும் நவீனமயப்படுத்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அரச காணிகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் காணி மோசடிகளைத் தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பில் இணைத்து, GPS அடிப்படையிலான தேசிய டிஜிட்டல் காணித் தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையிலான காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் குழு வலியுறுத்தியது.
இதனிடையே, விலங்குகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத் திருத்தம் மற்றும் தனியார் காணி வரைபடங்களை பாதுகாப்பாக ஆவணப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.
