போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு பல கோடி ரூபா பெறுமதிமிக்க சொத்துக்களை சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட வீந்தனி பிரியதர்ஷிக சூரியஆராச்சி எனும் “தொடலங்க பொட்டி” என்பவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (14) சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் கசுன் கஞ்சன தசநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தார்.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கடந்த 14 வருட காலப்பகுதியில் போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக 850 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டிய குற்றச்சாட்டில் வியாழக்கிழமை (13) கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நேற்றைய தினம் (13) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்த புலனாய்வு அதிகாரிகள், குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு பெருமளவிலான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியுள்ளதாகவும், அச்சொத்துக்களை முடக்குவதற்கான விசாரணைகளுக்கு அமையவே இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான பொலிஸ் அதிகாரி மன்றில் விடயங்களை முன்வைக்கையில், இந்த சந்தேகநபர் பாரியளவான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அதனூடாக 850 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக ஈட்டியுள்ளார். ஜா-எல பகுதியில் வீடொன்றுடன் கூடிய காணியையும், கிராண்ட்பாஸ் பகுதியில் தொடலங்க வீதியில் இரண்டு மாடி வீடொன்றுடன் கூடிய காணியையும், வெல்லம்பிட்டிய பகுதியில் மூன்று மாடி வீடொன்றுடன் கூடிய காணியையும் இவர் கொள்வனவு செய்துள்ளார்.
தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றங்களால் அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் 6 வங்கி கணக்குகள் ஊடாக பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், அந்த வங்கி கணக்குகளையும் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்ச்சியங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
