நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் (DAPH) இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, சுமார் 3 மில்லியன் பெறுமதியான, 1,090 கிலோகிராம் எடையுள்ள தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத கால்நடை மருந்துகள் அழிக்கப்பட்டன.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாததுடன், தேவையான தரநிலைகளையும் பூர்த்தி செய்யாத இந்த மருந்துகள் சோதனை நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டன.
தரமற்ற மருந்துகளை விலங்குகளுக்கு பயன்படுத்துவது அவற்றின் ஆரோக்கியத்திற்கும் உயிருக்கும் மட்டுமல்லாமல், இறைச்சி, பால் மற்றும் முட்டை போன்ற கால்நடைப் பொருட்களை நுகரும் மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உற்பத்தியாளர் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும், குறித்த மருந்துகள் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, முழு மருந்துத் தொகையும் அதிகாரிகளின் மேற்பார்வையில் கெரவலப்பிட்டிய மருத்துவக் கழிவு அகற்றும் நிலையத்தில் அழிக்கப்பட்டது.
மருந்துகளை அழிப்பதற்கான முழுச் செலவையும் உற்பத்தியாளரே ஏற்றுக்கொண்டார்.
செல்லப்பிராணிகள் அல்லது பண்ணை விலங்குகளுக்காக வாங்கப்படும் மருந்துகள், விட்டமின்கள் மற்றும் கால்நடைத் தீவனங்கள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை பொதுமக்கள் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அவற்றின் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதியையும் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்து, முறையாகப் பெயரிடப்பட்டுள்ள (labelled) பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்யுமாறும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
