கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
பதவிஸ்ரீபுர பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அனுராதபுரத்திலிருந்து கெபிதிகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமும் ஒன்றோடொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பதவிஸ்ரீபுர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தாய், அவரது 26 வயதுடைய மகள் மற்றும் பிறந்து 10 நாட்களேயான பச்சிளங்குழந்தை ஆகிய மூவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியைச் செலுத்திய 31 வயதுடைய சாரதி பலத்த காயமடைந்து கெபிதிகொல்லாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கெபிதிகொல்லாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
