பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளை Facebook குழுக்களில் பகிர்வது அதிகரித்து வரும் நிலையில், அவ்வாறான குழுக்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்காக பொலிஸார் புதிய மின்னஞ்சல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அசௌகரியம் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பகிரப்படும் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பான முறைப்பாடுகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான காணொளிகள் உள்ளிட்ட உள்ளடக்கங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான உள்ளடக்கங்களை பகிரும் Facebook குழுக்களை அடையாளம் கண்டு அவற்றை முடக்குவதற்கும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்களை வெளியிடும் Facebook குழுக்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பெலியத்த பகுதியில் வைத்து பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், 011 2381058 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
