செங்கலடி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மயிலத்தமடு – மாதவணை பண்ணையாளர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள், தமது கால்நடைகள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு கொள்ளையிடப்படுவதாகவும், தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் பிற இனத்தவரால் அபகரிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். தமது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோர், குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பண்ணையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
