கொட்டகலை தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான லொக்கில் (Lochiel) தோட்டப் பகுதியில் புதிய மர ஆலை ஒன்று அமைப்பதற்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) சம்பந்தப்பட்ட கட்டுமானப் பகுதியில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளியிட்டனர்
இந்த மர ஆலை அமைக்கப்படவுள்ள இடத்திற்கு அருகில் கிறிஸ்தவ தேவாலயமும், தோட்ட மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும் கோயிலும், தேயிலை கொழுந்து கொள்வனவு செய்யும் நிலையமும், தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மர ஆலை அமைக்கப்பட்டால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதுடன், வழிபாட்டுத் தலங்களில் அமைதியாக வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அத்துடன், பிரதான வீதிக்கு அருகில் இவ்வாறான மர ஆலை அமைக்கப்படுவதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே குறித்த பகுதியில் தேயிலைச் செடிகள் பிடுங்கி எறியப்பட்டுள்ளதுடன், தேயிலை கொழுந்து கொள்வனவு செய்யும் கட்டடமும் இடிக்கப்பட்டு மர ஆலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தோட்ட நிர்வாகத்தால் இந்த மர ஆலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வாறான மர ஆலை அமைப்பது பொருத்தமற்றது என தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
