மின்சார வாகனங்களுக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு குறித்து போக்குவரத்து பொலிஸார் போதிய தெளிவின்றி செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெளிவேரிய பகுதியில் தனது புதிய மின்சார வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த போக்குவரத்து பொலிஸார், குறித்த பச்சை நிற இலக்கத் தகடு தொடர்பில் அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மின்சார வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடு குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என தெரிவித்த பொலிஸார், அது போலி இலக்கத் தகடா என்ற சந்தேகத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பதிவு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி மற்றும் ஏனைய சட்டப்பூர்வ ஆவணங்களை காண்பித்து, தனது வாகன இலக்கத் தகடு சட்டபூர்வமானது என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர், இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நடைமுறைகள் மற்றும் சட்ட மாற்றங்கள் குறித்து போக்குவரத்து பொலிஸாருக்கு உரிய அதிகாரிகளால் சரியான முறையில் தெளிவுபடுத்தப்படாமமையே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் ஏனைய மின்சார வாகன உரிமையாளர்கள் இவ்வாறான தேவையற்ற அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் பொருட்டு, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளார்.
அவற்றுள் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் போக்குவரத்து பிரிவுகளுக்கும் மோட்டார் வாகன பதிவு மாற்றங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குதல் இது தொடர்பான அரச வர்த்தமானி அறிவித்தல்களின் பிரதிகளை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைப்பதை உறுதிசெய்தல் என்பவையாகும்.
இச்சம்பவமானது, நாட்டின் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடையே புதிய நடைமுறைகள் மற்றும் அடையாள அமைப்புகள் குறித்தான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாகச் சென்றடைகிறதா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
