பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள ‘Goodyear 4 Hours of Silverstone’ சிற்றூந்து பந்தயத்தின் சனிக்கிழமைக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
எனவே, சனிக்கிழமைக்கான நுழைவுச்சீட்டுகளை ஏற்கனவே பெற்றிருக்காதவர்கள் பந்தயத் திடலுக்கு வர வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகள் இன்னும் கிடைக்கின்றன. எனினும், அவையும் வேகமாக விற்பனையாகி வருவதால், விரைவாக நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் குறித்த பந்தயத்தை தமிழக முதலமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளமையால், அதிகளவான ரசிகர்கள் சில்வர்ஸ்டோன் பந்தயத் திடலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அந்தப் பகுதிக்குச் செல்லும் வீதிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பந்தயத் திடலுக்குச் செல்லும் ரசிகர்கள் தங்களது பயணத்திற்காக வழக்கத்தைவிட கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு, ஏற்பாட்டாளர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
