அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ‘அந்நிய பயங்கரவாத அகற்றும் நீதிமன்றம்’ (Alien Terrorist Removal Court – ATRC) அதன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு நாடுகடத்தல் உத்தரவைப் பிறப்பித்துள்ளமை இதுவே முதல்முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசிய ஆதாரங்களின் அடிப்படையில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமெரிக்கக் குடியுரிமை பெறாத நபர்களுக்கு எதிராகவே இந்த விசேட நீதிமன்றம் பயன்படுத்தப்படுகிறது.
டெக்சாஸ் மாநிலத்தின் ஃபோர்ட் வொர்த் நகரில் வசித்து வந்த நஸீரா ஹாஜி சாதா என்ற இந்த பெண் மீது எந்தவொரு குற்றவியல் வழக்கும் நேரடியாகப் பதிவு செய்யப்படவில்லை.
இருப்பினும், 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளில் தீவிரவாத அமைப்பின் தூண்டுதலால் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்ட குற்றத்துக்காக இவரது மகனும் மருமகனும் தண்டிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், குடும்பத்தினரை தீவிரவாதப் பாதைக்கு வழிநடத்திய “குடும்பத் தலைமைப் பெண்” என அரச தரப்பு சட்டத்தரணிகள் இவர் மீது குற்றஞ்சாட்டினர்.
அரசாங்கத்துடன் நீண்ட சட்டப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, அமெரிக்காவை விட்டு வெளியேற நஸீரா ஹாஜி சாதா சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் அமெரிக்க அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக நஸீரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கோ அல்லது அவரது சட்டத்தரணிகளுக்கோ, எதிரான ஆதாரங்களைக்கூடக் காண்பிக்காமல் ரகசியமாக நடத்தப்படும் இந்த நீதிமன்ற முறைமை, அரசியலமைப்புக்கு முரணானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த நடவடிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்துள்ள வெற்றி என அமெரிக்க சட்டமா அதிபர் டோட் பிளான்ச் (Todd Blanche) தெரிவித்துள்ளார்.
