போதைப்பொருள் கடத்தல்காரரான டுபாய் சுத்தாவின் போதைப்பொருள் வலையமைப்பில், பண்டாரகம பகுதிக்கான பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம – வெல்மில்ல அலோதியாவ பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் தங்கியிருப்பதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 50 கிராம் ஹெரோயின், 25 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் பொதியிடப் பயன்படுத்தப்படும் விசேட காகிதங்கள், பொலித்தீன் உரைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் 04 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு சொகுசு கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருட்களை பொதியிடும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த ஏழு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
