யாழ். போதனா வைத்தியசாலை களஞ்சிய சாலை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை (9) ஏற்பட்ட தீ சுமார் 5 மணிநேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விபத்தினால் பல மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயினை அணைக்க வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்ததோடு, மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார், மின்சார சபையினர் உள்ளிட்ட பல தரப்பினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயினை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர்,
சுமார் 5 மணிநேர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மருந்து களஞ்சியசாலைக்குள் எளிதில் தீ பற்றக்கூடிய அசிட் உள்ளிட்டவையும் காணப்பட்டமையால் தீ வேகமாக பரவியுள்ளது, இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், தீயில் எரிந்துள்ள நிலையில் கட்டடம் உள்ளிட்டவை கடும் சேதமடைந்துள்ளன.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தற்போது மருந்து களஞ்சியசாலையை சுத்தம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை, குறித்த களஞ்சியசாலை பகுதிக்குள் அண்மையில் மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருக்க குளிரூட்டப்பட்ட அறை (Cool Room ) அமைக்கப்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட மின்கசிவு, இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
