கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள கட்டடம் ஒன்றில் இன்று (11) திங்கட்கிழமை மாலை பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், கொழும்பு தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இதுவரையில் குறைந்தது 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீ விபத்தினால் இதுவரை எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், கட்டடத்திற்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை.
குறித்த கட்டடத்தில் தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை டேம் வீதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
