தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சவர்க்காரங்கள் பறிமுதல்: ‘கியூ’ பிரிவு காவல்துறையினர் அதிரடி
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகப் கடத்தப்படவிருந்த பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, தூத்துக்குடி ‘கியூ’ பிரிவுக்கு கிடைத்த தகவல்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது, மே 12ஆம் திகதி இரவு சுமார் 9.15 மணியளவில், திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பதிவு செய்யப்படாத ஃபைபர் படகு ஒன்றில் பொருட்கள் ஏற்றப்படுவதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, அந்தப்படகை முற்றுகையிட்ட காவல்துறையினர், படகில் இருந்து 1,200 இயற்கை பப்பாளி சவர்க்காரங்கள் அடங்கிய 5 அட்டைப் பெட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஃபைபர் படகு ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சவர்க்காரங்களின் பெறுமதி இந்திய ரூபாயில் சுமார் 5 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரை கண்டதும் சந்தேக நபர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
