களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று சனிக்கிழமை (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தானது, இரும்புத் தகடுகள் திருடும் நோக்கில் கழற்றப்பட்டதா அல்லது இது ஒரு திட்டமிட்ட சதிவேலையா என்பது குறித்து விசேட பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரதான பாதையிலிருந்து திடக்கழிவு முனையத்துக்குச் செல்லும் தண்டவாள இணைப்புப் பகுதியில் இருந்த உலோகத் தகடுகள் அகற்றப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தண்டவாள இணைப்பு தளர்வடைந்ததால், ரயிலின் முன்பெட்டி பிரதான மார்க்கத்திலும், பின்பெட்டிகள் கழிவு முனைய மார்க்கத்திலும் பயணித்துள்ளன. இதனால் இரண்டாவது பெட்டி இரு தடங்களுக்கும் குறுக்காகத் தடம்புரண்டு கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 12 பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகி அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இணைப்புப் பகுதி தளர்ந்ததால் ரயிலின் பெட்டிகள் வெவ்வேறு தண்டவாளங்களில் பயணித்து விபத்துக்குள்ளாகின. ஒரு கும்பல் நாசகார வேலைக்காகவோ அல்லது திருட்டுக்காகவோ குறித்த உலோகத் தகடுகளை அகற்றியுள்ளனர். இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
தற்போது விபத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய பேலியகொட பொலிஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
