இலங்கையில் இளம் வயது சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் நிலை அதிகரித்து வருவதால், இது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர்களும் பெண்பிள்ளைகளும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸ் நிலையங்களுக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில், இத்தகைய நிலைகளுக்குக் குடும்பத்திலிருந்து குறைந்து வரும் அன்பும் பாசமுமே முக்கிய காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றோரின் அதிக வேலைப்பளு காரணமாக பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்காதபோது, அவர்கள் தாயிடமிருந்தோ தந்தையிடமிருந்தோ கிடைக்காத அன்பை வெளிப்புற நபர்களிடம் தேட முற்படும் சூழலில் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகளால் சிறுமிகளின் கல்வி முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் எதிர்காலமும், குழந்தைப் பருவமும் இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பெற்றோரிடமிருந்து மனதளவில் விலகும் சிறுமிகள், தங்களின் சிறந்த நண்பனாகக் கையடக்கத் தொலைபேசிகளைத் தேர்ந்தெடுப்பதும் இதற்கொரு முக்கிய காரணமாகும்.
இவ்வாறான துரதிர்ஷ்டவசமான நிலைகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கப் பெற்றோர்களும் பெரியவர்களும் அவதானம் செலுத்த வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆதன்படி, சிறுமிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பயமின்றிப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளக்கூடிய சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு எப்போதும் அன்பு, பாசம், கருணை ஆகியவற்றைத் தங்குதடையின்றிக் குறைவில்லாமல் வழங்க வேண்டும்.
நவீன தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது, பிள்ளைகள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
திடீர் நடத்தை மாற்றங்கள், கல்வியில் ஆர்வக்குறைவு, எப்போதும் தொலைபேசியில் மூழ்கியிருப்பது, தனிமையில் இரகசியமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கலந்துரையாடி ஆலோசனை வழங்க வேண்டும்.
பெற்றோரின் பாதுகாப்பில் இருந்தாலும், சிறுமிகள் இத்தகைய குற்றச்செயல்களுக்கு ஆளாகாமல் இருக்க செயற்பட வேண்டும்,
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் மூலம் அறிமுகமாகும் அந்நிய நபர்களை எக்காரணம் கொண்டும் நம்பக் கூடாது. தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஏதேனும் தொந்தரவு, பயம் அல்லது சந்தேகம் ஏற்பட்டால் அதனை மறைக்காமல் உடனடியாகப் பெற்றோர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
ஏதேனும் ஆபத்து, துஷ்பிரயோகம் அல்லது மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119, 118, 109, 107 ஆகிய அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கங்களுக்கோ தகவல் வழங்குமாறு இலங்கை பொலிஸ் பெற்றோர்களிடமும் சிறுமிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
