மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாவியில் சம்பவ தினமான இன்றையதினம் காலை 6.30 மணியளவில் வழமைபோல மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து , அதனை மீட்ட மீனவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த நபர் மது போதையில் வாவியில் நீராடிய நிலையில் நீரிழ் மூழ்கியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், உடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
