இலங்கைக்கு வடக்கே வங்காள விரிகுடாவில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இலங்கையைச் சூழவுள்ள கடல் பரப்பில் இதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்கால வானிலை பகுப்பாய்வுகளின்படி, இந்த வளிமண்டலத் தொகுதி தனது வலிமையை இழந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகள் மற்றும் நாட்டை சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகளுக்கு இனி இதனால் எவ்வித பெரிய தாக்கமும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் பிராந்தியங்களில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினரின் பாதுகாப்பு கருதியே இந்த விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முற்றாக வலுவிழந்ததைத் தொடர்ந்து, இந்த வளிமண்டலத் தொகுதி தொடர்பாக வெளியிடப்படும் இறுதி வானிலை அறிக்கை இதுவெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
