உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்தின் “கடைசி நூல்” மக்கள் விடுதலை முன்னணிவசமே உள்ளது என்பது தற்போது தெளிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் விசாரணை முறைகள் குறித்து நாமல் ராஜபக்ச கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஞாயிறு தாக்குதலின் கோப்புகளை (Files) மூடிமறைத்த அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கி, அதே அதிகாரியை அனுப்பி வாக்குமூலம் எழுதி வாங்குவதாக அவர் சாடினார்.
இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர உறுப்பினர்கள் என்றும், தாக்குதல் நடத்தியவரின் தந்தை JVP இன் தேசியப் பட்டியலில் இருந்த ஒரு நபர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தங்களிடம் இருப்பதாகக் கூறிய சாட்சிகளை அவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மிரட்டி, வலுக்கட்டாயமாக வாக்குமூலங்களை எழுதி வாங்கி, மனித உயிர்கள் இழந்திருக்கும் நிலையிலும், அதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற முயற்சிக்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, இதிலிருந்தே இந்நாட்டின் சட்டம் யாருடைய தேவைக்காகவும், யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் செயல்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது எனத் தெரிவித்தார்.
