மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் உலகளாவிய ரீதியில் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன மற்றும் தொற்றுநோய் விபரவியல் நிபுணர் மருத்துவர் மஹேஷாக விஜயவர்தன ஆகியோர் தெரிவிக்கையில்,
இலங்கைக்குள் இந்நோய் நுழைவதைத் தடுப்பதற்காகச் சுகாதார அமைச்சு 5 கட்டத் தயார்நிலைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
வானூர்தி நிலையங்கள் மற்றும் சர்வதேச நுழைவாயில்களில் கண்காணிப்பை பலப்படுத்துதல்.
சந்தேகத்திற்கிடமான நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அங்கொடை தேசிய தொற்றுநோய் அறிவியல் நிறுவனத்தை தயார் நிலையில் வைத்திருத்தல்.
ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் நோய் நிர்ணயப் பணிகளுக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை தயார் படுத்துதல்.
நாடளாவிய ரீதியில் நோய் கண்காணிப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல்.
உலகளாவிய நிலைமைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து நெருக்கமாகச் செயலாற்றுதல்.
இலங்கையில் இதுவரை எந்தவொரு எபோலா நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை என்றும், இந்நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
