மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் உள்ள விடுதியொன்றில் இன்று(27) சுமார் 4.00 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் போது அந்த விடுதியில் தங்கியிருந்த 2 குழந்தைகள் தீப்பரவளினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததனால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த குழந்தைகளின் தாய் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாயை பார்ப்பதற்காக கடந்த 23 ஆம் திகதி பிள்ளைகளின் தந்தை குழந்தைகளோடு குறித்த விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே, இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த குழந்தைகள் 05 வயதுடைய சந்தனி நிமாஷா மற்றும் 3 வயதுடைய கசுன் மதுசங்க என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விடுதியில் தங்கியிருந்த குழந்தைகளின் தந்தை, சுமார் 2.00 மணியளவில் இரண்டு குழந்தைகளையும் அறையில் வைத்து பூட்டிவிட்டு, மது அருந்த சென்றுள்ளார். அவர் மீண்டும் அறைக்குத் திரும்பிய போதே அறையில் தீப்பிடித்திருந்தது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் அறையிலேயே மயங்கியிருந்த நிலையில் , தந்தையினால் குழந்தைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 2 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

விடுதியின் உணவருந்தும் அறையில் ஏற்பட்ட தீயினை விடுதி ஊழியர்கள் அணைத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம்இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் மற்றும் குற்ற புலனாய்வுக் குழுவினரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

