போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் பல்வேறு ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சில சாரதிகள், தொடர்ந்து அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெற்று வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெவ்வேறு ஒழுக்காற்று விவகாரங்கள் காரணமாக 400க்கும் 500க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான சாரதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் சில சாரதிகள் இன்னமும் மாதாந்த சம்பளத்தைப் பெற்று வருவதாகவும் அதிகாரிகள் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல்வேறு சட்டச் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியிலும் குறித்த சாரதிகளுக்குச் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, அரச பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னரும், அரசாங்கத்திடம் சம்பளம் பெறும் சில சாரதிகள், வெளியில் தனியார் பஸ்களில் சாரதிகளாகப் பணிபுரிந்து இரட்டை வருமானம் ஈட்டி வருவதாகவும் அதிகாரிகள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விடயங்களை ஆராய்ந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உரிய சட்ட ஆலோசனைகளை விரைவாகப் பெற்று, மேற்படி ஒழுக்காற்றுப் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
