கொழும்பு – நுகேகொடை ஸ்ரீ தர்மாராமய விகாரையின் பெரஹெராவை முன்னிட்டு மிரிஹான பொலிஸ் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகேகொடை ஸ்ரீ தர்மாராமய விகாரையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரஹரா நிகழ்வை காண்பதற்கு பெருமளவிலான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெரஹெரா ஊர்வலம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குள் நடைபெறவுள்ளதால், நிகழ்வை இலகுபடுத்தவும், வீதியைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கவும் விசேட போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பெரஹெரா ஊர்வலம் நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் ஆரம்பமாகி, ஹைலெவல் வீதி வழியாக கம்சபா சந்தி வரை செல்லும்.
அங்கிருந்து பழைய கெஸ்பேவ வீதி ஊடாக கட்டிய சந்திக்குச் சென்று, பின்னர் நுகேகொடை நகரை நோக்கி நகர்ந்து, ஸ்டான்லி திலகரத்ன மாவத்தை ஊடாக மீண்டும் ஆரம்பப் புள்ளியை வந்தடையும்.
எனவே இரவு 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும், வாகன ஓட்டுநர்கள் வேறு வீதிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி, நுகேகொடை எயார்போர்ட் சந்திக்கும் கம்சபா சந்திக்கும் இடைப்பட்ட ஹைலெவல் வீதிப் பகுதி, கொழும்பிலிருந்து வெளியேறும் திசையிலான இரண்டு வீதிகள் ஊர்வலத்திற்காக ஒதுக்கப்படும்.
கொழும்பு நோக்கி வரும் திசையிலான இரண்டு வ்Pதிகள், தற்காலிகமாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஒரு வீதியூடாகவும், கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்கு ஒரு வீதியூடாகவும், இருவழிப் போக்குவரத்தாக மாற்றியமைக்கப்படும்.
இரவு 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை, கம்சபா சந்திக்கும் கட்டிய சந்திக்கும் இடைப்பட்ட வீதிப் பகுதி வாகனப் போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்படும்.
மாற்று வழிகள்
பப்பிலியானவிலிருந்து கட்டிய சந்தி ஊடாக ஜூபிலி கனுவ நோக்கிச் செல்லும் வாகனங்கள், கம்சபா சந்தியில் இடப்பக்கமாகத் திரும்பி, நுகேகொடை நகர் ஊடாகச் சென்று, ஸ்டான்லி திலகரத்ன மாவத்தையைப் பயன்படுத்தி ஜூபிலி கனுவவை சென்றடையலாம்.
மிரிஹான சுற்றுவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள், பழைய கொட்டாவ வீதி வழியாக மகரகம நோக்கி பயணித்து, ஹைலெவல் வீதி ஊடாக மீண்டும் கம்சபா சந்தியை அடையலாம்.
இரவு 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை, பழைய கெஸ்பேவ வீதியானது நுகேகொட நாவல சுற்றுவட்டத்திலிருந்து தெல்கந்த சந்தி வரை தற்காலிகமாக மூடப்படும்.
நாவல வீதியிலிருந்து தெல்கந்த நோக்கி பயணிக்கும் வாகனங்கள், நுகேகொட நாவல சுற்றுவட்டத்திலிருந்து இடப்பக்கமாகத் திரும்பி, ஸ்டான்லி திலகரத்ன மாவத்தை ஊடாக பழைய கொட்டாவ வீதியை அடையலாம்; அல்லது
மகரகம ரொலன்ஸ் சந்தியில் வலப்பக்கமாகத் திரும்பி, ஹைலெவல் வீதி வழியாக தெல்கந்தவை நோக்கிச் செல்லலாம்; அல்லது நுகேகொட நாவல சுற்றுவட்டத்திலிருந்து வலப்பக்கமாகத் திரும்பி, நேரடியாக ஹைலெவல் வீதி ஊடாக தெல்கந்தவை நோக்கிச் செல்லலாம்.
பழைய கெஸ்பேவ வீதி வழியாக தெல்கந்தவிலிருந்து நாவல நோக்கி பயணிக்கும் வாகனங்கள், தெல்கந்த சந்தியிலிருந்து நுகேகொட நோக்கி பயணித்து, நுகேகொட மேம்பாலத்திற்கு கீழுள்ள வீதி வழியாக நுகேகொட நகருக்குள் நுழைந்து பயணிக்க முடியும்.
பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் இந்த வீதிகளைப் பயன்படுத்த உத்தேசித்துள்ள வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள், மாற்று வழிகளைப் பின்பற்றுமாறும், கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் போக்குவரத்து அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்
