யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில், கணவரின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நீர்வேலியைச் சேர்ந்த குறித்த பெண், நீண்டகாலமாக தனது கணவரின் உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு உள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. தனக்கும் தனது குழந்தைகளுக்கும் எதிராக இடம்பெற்ற துன்புறுத்தல்கள் குறித்து அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று முறை முறைப்பாடு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அந்த முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், பின்னர் அவர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்திலும் தனியாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இரு பொலிஸ் நிலையங்களிலும் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு பின்னரும் தீர்வோ அல்லது சட்ட நடவடிக்கையோ மேற்கொள்ளப்படாத சூழலில், கணவரின் தாக்குதலால் மனவேதனை அடைந்த அவர் கடந்த தினம் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் இருந்த கணவர், தீயை அணைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வீட்டில் இருந்த பெண்ணின் தாய் தீயை அணைத்து, உடனடியாக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். தற்போது அவர் அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சம்பவத்துக்கு காரணமாக குற்றஞ்சாட்டப்படும் கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
