இன்று (08) காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடற்பகுதிகள் இடைக்கிடையே மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை குறித்த கடற்பகுதிகளுக்கு மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளுக்காகச் செல்ல வேண்டாம் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இன்று சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பகுதிகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேவேளை, காங்கேசன்துறை – மன்னார் – கற்பிட்டி கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
அதேபோன்று, திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வழியாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்குறிப்பிடப்பட்ட கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பான நிலையைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் நிலை மேலும் மோசமடைந்து மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
