இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய ஜீவன் தொண்டமான், மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் அவசியம் என வலியுறுத்தினார்.
ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளம் என்பது, தாம் செய்வதே சரி எனக் கருதுவது அல்ல; குறைபாடுகள் இருந்தால் அவற்றை கேட்டறிந்து தீர்வுகளை மேற்கொள்வதே என அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், கௌரவ ஜனாதிபதி அவர்கள் டித்வா புயல் தொடர்பாக கொத்மலை – வேவன்டன் தோட்டத்தை மையமாகக் கொண்டு கருத்து தெரிவித்திருந்தாலும், எழுத்து மூலமாக கடிதங்கள் வழங்கப்பட்டும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
காணியுரிமை தொடர்பான விடயங்கள் அவசரமாக கவனிக்கப்பட வேண்டியவை என்றும், காணியுரிமை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகார ஆவணங்கள் உள்ள நிலையில் அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்ந்து நிலவுகின்றன என்றும், நிறுவனங்கள் விதிக்கும் பல்வேறு நிபந்தனைகள் காரணமாக சிக்கல்கள் உருவாகியுள்ளன என்றும் தெரிவித்த அவர், இதற்கான தீர்வாக சம்பள நிர்ணய சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
