மட்டக்களப்பு நகரின் புகையிரத வீதியில் இன்று (10) புதன்கிழமை நண்பகல் சுமார் 12.30 மணியளவில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென வீதிக்குள் திரும்ப முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுணதீவு கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், அவருடன் பயணித்த மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளார். இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
