அளுத்கம புகையிரத குறுக்கு வீதியில் நேற்று புதன்கிழமை (10) மாலை, பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முயன்ற முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதத்துடனேயே முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் கரபாகல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புகையிரதம் வருவதை உணர்த்தும் வகையில் சமிக்ஞை விளக்குகள் ஒளிரவிடப்பட்டிருந்த நிலையிலும், முச்சக்கரவண்டி சாரதி அதனைப் பொருட்படுத்தாமல் பாதுகாப்பற்ற முறையில் புகையிரத குறுக்கு வழியைக் கடக்க முயன்றதே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அளுத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
