மீன்பிடிப்பிற்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதற்கும், மீன் மற்றும் கடலுணவுப் பொருட்களின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம் வழங்கிய உதவித் திட்டத்தின் கீழ் குளிரூட்டப்பட்ட ஆறு லொறிகள் இலங்கையின் மீன்வளத் துறைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் நேற்று (10) இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமட்டாவினால் இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முகம்மது நவ்ராஸ் நசாரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியுதவியுடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மூன்று பனிக்கட்டி உற்பத்தி இயந்திரங்களும் நிறுவப்படவுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு மீன்களை கொண்டு செல்வதில் போதிய குளிர்சாதன வசதிகள் இல்லாதமை காரணமாக, மீன்பிடிப்பிற்குப் பிந்தைய இழப்புகள் 40 சதவீதம் வரை ஏற்படுவதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
புதிய குளிரூட்டப்பட்ட லொறிகள் இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்தினால் இயக்கப்படவுள்ளதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து கடலுணவுப் பொருட்களை கொழும்பிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படவுள்ளன.
இதன் மூலம் பொருட்களின் தரம் பாதுகாக்கப்படுவதோடு, வீணாகும் அளவு குறைந்து விநியோக நடவடிக்கைகளும் மேலும் திறம்பட இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் உரையாற்றிய ஜப்பான் தூதுவர் அகியோ இசோமட்டா, மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்வடைந்து வரும் நிலையில், குளிர்சாதன விநியோக சங்கிலியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
“குளிர்சாதன சங்கிலி என்பது மீன்களை குளிர்வித்து பாதுகாக்கும் தொழில்நுட்பம் அல்லது போக்குவரத்து முறைமையாக மட்டும் அல்ல. அது மீனவர்களின் உழைப்பை பாதுகாக்கும், நுகர்வோரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் அடித்தளமாகும்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், போதிய வெப்பநிலை கட்டுப்பாடு இல்லாதது அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, சுகாதார ஆபத்துகள், விலை வீழ்ச்சி மற்றும் சந்தை நம்பிக்கையிழப்புக்கும் வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டம் தனியார் துறையின் மேலதிக முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும், இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
