இலங்கையின் தென்னை நார் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது. இத்துறையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 294 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.5 சதவீத வளர்ச்சியாகும்.
எனினும், மூலப்பொருளான தென்னை நாரின் பற்றாக்குறை மற்றும் அதனால் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் உள்ளிட்ட விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை அண்மையில் துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
விநியோகத் தொடரில் பல்வேறு அழுத்தங்கள் நிலவினாலும், இந்த ஏற்றுமதி பெறுபேறுகள் இத்துறையின் உறுதித்தன்மையையும் நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்கு வழங்கும் முக்கிய பங்களிப்பையும் வெளிப்படுத்துகின்றன.
தற்போது நிலவும் தென்னை நார் தட்டுப்பாடு காரணமாக உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச சந்தைகளுக்கான ஆர்டர்களை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதிலும் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலைமைக்கு தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடலில், தென்னைத் தொழில்துறையை வலுப்படுத்தும் குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மூலப்பொருள் கிடைப்பை மேம்படுத்துதல், நார் விநியோகத் தொடரை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான கொள்கை ரீதியான ஆதரவுகளை வழங்குதல் போன்ற விடயங்கள் இதில் ஆராயப்பட்டன.
இலங்கையின் ஏற்றுமதித் துறைகளை மேம்படுத்தும் தேசிய நிறுவனமாக, இத்துறையின் கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு சவால்களுக்கு தீர்வு காணும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை EDB தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இக்கூட்டத்திற்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் முதன்மை நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க தலைமை தாங்கினார். தென்னை பயிர்ச்செய்கை சபை, தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை, தென்னை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
மேலும், தென்னை நார் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் பங்கேற்று துறையின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பாக கருத்துகளை முன்வைத்தனர்.
