கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது பெருமளவிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை (30) அதிகாலை வேளையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, 4 கிலோ கிராம் 104 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த பிரதான சந்தேக நபர் ஒருவரும், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதாரமாகவும் உடந்தையாகவும் செயற்பட்ட மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
