தலை ஒன்றாக இணைந்த நிலையில் பிறந்த இரட்டைச் சகோதரிகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன அறுவைச் சிகிச்சைகள் மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு நைஜீரியாவில் பிறந்த மெர்சி மற்றும் குட்னஸ் என்ற இரட்டையர்கள், இணைந்த மண்டையோடுகள், பகிரப்பட்ட மூளைத் திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களுடன் காணப்பட்டனர். அவர்களைப் பிரிப்பதற்காக நான்கு கட்டங்களாக நடைபெற்ற சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் மொத்தமாக சுமார் 40 மணிநேரம் நீடித்தன.
இந்த அறுவைச் சிகிச்சையைத் திட்டமிடவும், முன்கூட்டியே பயிற்சி மேற்கொள்ளவும் மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவு, 3D மாதிரியாக்கம், மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality) மற்றும் விரிவாக்கப்பட்ட யதார்த்தம் (Augmented Reality) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர். இதன் மூலம் மிகுந்த துல்லியத்துடன் சிகிச்சையை முன்னெடுக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட பிரிப்பு அறுவைச் சிகிச்சை அபுதாபியில் உள்ள Sheikh Khalifa Medical City மருத்துவமனையில், குழந்தைகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் பேராசிரியர் நூர் உல் ஒவாசே ஜீலானியின் தலைமையிலும், பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட Gemini Untwined தொண்டு அமைப்பின் ஒத்துழைப்புடனும் மேற்கொள்ளப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முழுமையாகக் குணமடைந்த இரட்டையர்கள் தற்போது தங்கள் சொந்த நாடான நைஜீரியாவிற்குத் திரும்பியுள்ளனர். உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக மருத்துவ நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
