கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் குறித்த நபர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த கண்டி பகுதியிலுள்ள வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரை கைது செய்வதற்காக பொலிஸார் 10 இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், சந்தேகநபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் வழங்கிய தகவலின்படி, சிறுவயது முதலே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி பணம் மற்றும் பொருட்களைப் பெற்றவர் என தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேகநபர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
