கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில், பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் சாலையைக் கடக்க முற்பட்டபோது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த அவர், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெருமாள் கணேசன் கல்வித்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவராகவும், கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும் அறியப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றதுடன், வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
