கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, அவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஜனசெத பெரமுன கட்சியின் காரியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய அவர்களே, நாட்டின் பிள்ளைகளைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உயர்தர வகுப்பு மாணவர்களின் தற்போதைய பிரச்சினைகளை ஒரு பொறுப்பான அரச தலைவராகப் புரிந்துகொள்ளுங்கள்.
தற்போது வழங்கப்பட்டுள்ள குறுகிய காலப்பகுதிக்குள் உயர்தரப் பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்து பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களுக்கு மிகவும் கடினமானதொன்றாகும்.
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் எவ்வகையிலும் போதுமானதாக இல்லை. எனவே, கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற ரீதியில் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, அவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
உயர்தரப் பரீட்சை எழுதுவது என்பது சாதாரணமான அல்லது இலகுவான காரியமல்ல. நீங்களும் கடந்த காலத்தில் உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்துப் பயின்றிருப்பீர்கள் என்பதால், அந்த மாணவர்களின் மனநிலையை உணர்ந்து இதற்கான தகுந்த தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
