வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களில் காலை நேரங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பாக, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று வியாழக்கிழமை (25) அந்த அலுவலகத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.
அந்த கலந்துரையாடலின் அடிப்படையில், அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு பின்வரும் தகவல்களை அறிவித்துள்ளார்.
1. வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) யூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என எந்தவித காலக்கெடுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.
2. TIN இலக்கம் பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அவ்வாறு கட்டணம் செலுத்துவது அல்லது பெற்றுக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
3. ஏற்கனவே TIN பதிவு செய்யப்பட்டிருந்தால், உரிய நபர் தனது தேசிய அடையாள அட்டையை காண்பித்து வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
4. TIN பதிவு செய்யப்படவில்லை என்றால், www.ird.gov.lk என்ற இணையதளம் மூலம் நிகழ்நிலை (Online) முறையில் அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் பெறலாம். தற்போது பதிவு செய்பவர்களுக்கு TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
5. மேலதிக தகவல்களுக்கு 0212217333 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.
எனவே மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில், பொதுமக்கள் எந்தவித அச்சமோ பீதியோ கொள்ளத் தேவையில்லை என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
