வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னர் இன்று (27) மீண்டும் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவான மற்றொரு நிலநடுக்கம் வடக்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை அந்நாடு ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. அந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 920 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 243 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 3,360-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தலைநகர் கராகஸ் உட்பட வடக்கு பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், பலர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சர்வதேச மீட்புக் குழுக்களும் வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
முதன்மை நிலநடுக்கத்திற்குப் பிறகு இதுவரை 214 பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, தலைநகர் கராகஸின் வடக்கே அமைந்துள்ள லா குவைரா பகுதியே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகளும் ஊடகங்களும் எச்சரித்துள்ளன. இதேவேளை, 1,000-க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தோரால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
