சமூக ஊடகங்களில் பரவி வரும், ஒரு நாயை தடியால் தாக்கி கொல்லும் காணொளி தொடர்பான சம்பவம், 2025 ஆகஸ்ட் 7ஆம் திகதி பொதுப்பிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள சதொச விற்பனை நிலையம் முன்பாக இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், 2025 ஆகஸ்ட் 27ஆம் திகதி இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவம் நடைபெற்ற நாளில் குறித்த நாய் ஒன்பது வயது சிறுவன் ஒருவரைக் கடித்திருந்ததாகவும், கைது செய்யப்பட்ட இருவரும் அந்தச் சிறுவனின் உறவினர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களே நாயின் தலையை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அந்த நாய்க்கு வெறிநாய் (Rabies) தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொதுப்பிட்டிய பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். வழக்கின் அடுத்த விசாரணை 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
