வீரகெட்டிய பகுதியில் சனிக்கிழமை (27) இரவு நடத்தப்பட்ட மதுவிருந்தொன்றில் ஏற்பட்ட தகராறில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாந்தோடை மாவட்ட இளைஞர் அமைப்பின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய 30 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீரகெட்டிய – கிஞ்சிகுணே பகுதியில் சனிக்கிழமை (27) இரவு மதுவிருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மதுவிருந்தின் போது, உயிரிழந்த இளைஞருக்கும் அங்கிருந்த மற்றொரு நபருக்குமிடையே திடிரென வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதை அடுத்து, ஏற்பட்ட மோதலில் சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் குறித்த இளைஞரைத் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த இருவருக்குமிடையிலான மோதலில் சந்தேகநபரின் தாயாரும் இதன்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில், வீரகெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர அரசியல் செயல்பாட்டு உறுப்பினர் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான மெதமுலன பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
