இலங்கையில் வெளிநாட்டு திரைப்பட தயாரிப்புகளுக்கான அனுமதி செயல்முறையை எளிமைப்படுத்தும் நோக்கில், “ஒற்றை சாளர (Single Window)” அனுமதி முறைமையை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் திரைப்பட சுற்றுலா துறையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு, ஜனாதிபதி செயலாளர் டாக்டர் நந்திகா சனத் குமணாயக்க தலைமையில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தின் அமலாக்கத்திற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது, இலங்கையில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள், இசை வீடியோக்கள் மற்றும் பிற காணொளி உள்ளடக்கங்களை தயாரிக்க விரும்பும் வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் பல்வேறு அரச நிறுவனங்களின் அனுமதிகளை தனித்தனியாக பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல நேரங்களில் நீண்ட கால தாமதங்கள் ஏற்படுகின்றன.
இந்த சிக்கலை குறைக்கும் வகையில், ஒருங்கிணைந்த ஒற்றை சாளர அனுமதி முறைமை ஒன்றை உருவாக்குவது குறித்து அதிகாரிகள் விவாதித்தனர். அதேவேளை, அதை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய சவால்கள், அவற்றை சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு ஆகியவையும் பரிசீலிக்கப்பட்டன.
புதிய முறைமையின் மூலம் இலங்கை வெளிநாட்டு திரைப்பட மற்றும் காணொளி தயாரிப்புகளுக்கு மேலும் ஈர்க்கக்கூடிய இடமாக மாறும் என்றும், நாட்டின் திரைப்படத் துறையின் போட்டித்திறன் அதிகரிக்கும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.
