இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை 61,060 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 2,604 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மொத்த நோயாளிகளில் 52.50% அதிகபட்சமாக 32,054 பேர் மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
தெற்கு மாகாணத்தில் 9,674 பேர், சபரகமுவ மாகாணத்தில் 5,237 பேர் பதிவாகியுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 4,823 பேர், கிழக்கு மாகாணத்தில் 2,979 பேர், வடமேற்கு மாகாணத்தில் 2,778 பேர், ஊவா மாகாணத்தில் 1,550 பேர், வடமத்திய மாகாணத்தில் 1,013 பேர் மற்றும் வடக்கு மாகாணத்தில் 957 பேர் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 12,445 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 12,282 பேர், மாத்தறை மாவட்டத்தில் 4,428 பேர் பதிவாகியுள்ளனர்.
நாட்டின் 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்து பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத வாரியாக பார்க்கும்போது, அதிகபட்ச டெங்கு நோயாளிகள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மட்டும் 21,546 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
