நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, சம்பந்தப்பட்ட அமைச்சின் பொறுப்பாளராக இதற்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இன்று (06) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தற்போது சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியதுடன், மனித உயிரிழப்புகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
“மனித உயிர்கள் பறிபோனது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், ஒருவர்மீது பழியை சுமத்துவதை விட, உண்மைகளை கண்டறிந்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே தமது முதன்மை நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
