முன்னாள் நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அரசியல் எதிரிகளை கைது செய்து வழக்குத் தொடர்வதிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதால், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், ஒரு அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பு நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதேயன்றி, முன்னாள் ஆட்சியாளர்களைத் துரத்துவது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
“ஒரு அரசாங்கத்தின் பிரதான நோக்கம் அரசியல் எதிரிகளையும் முன்னாள் ஆட்சியாளர்களையும் கைது செய்து, தடுத்து வைத்து, வழக்குத் தொடர்வதாக மாறினால், ஆட்சிப் பணிகள் பாதிக்கப்படுவது ஆச்சரியமல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு பரவல், சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காத நிலை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு போன்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதே நல்லாட்சியின் உண்மையான அளவுகோல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“கைது செய்வதும் வழக்குத் தொடர்வதும் செய்தித் தலைப்புகளை உருவாக்கலாம். ஆனால் அவை மக்கள் நலக் கொள்கைகளாக மாறாது. கைவிலங்கு அணிவிப்பது சுகாதாரக் கொள்கை அல்ல; விளக்கமறியல் உத்தரவு விவசாயக் கொள்கை அல்ல; வழக்குத் தொடர்வது பொருளாதாரத் திட்டம் அல்ல; சிறைக் கூடம் நல்லாட்சிக்கான சான்றும் அல்ல” என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி அவசியமானவை என்றாலும், விசாரணைகளும் வழக்குகளும் சட்டபூர்வமாகவும், பாரபட்சமின்றியும், நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்; அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நிறுவனங்களின் சுயாதீனப் பாதுகாப்புகளை பலவீனப்படுத்தக் கூடாது என்றும், அரசியல் அதிகாரம் தற்காலிகமானது; ஆனால் இன்று உருவாக்கப்படும் முன்னுதாரணங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை அரசாங்கங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இறுதியாக, பழிவாங்குதலையும் நல்லாட்சியையும் ஒன்றாகக் கருதக் கூடாது என்றும், “பழிவாங்குதலே அரசாங்கத்தின் நோக்கமாக மாறும்போது, நல்லாட்சியே அதன் முதல் பலியாகிறது” என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
