கொழும்பு — இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (07) இடம்பெற்றது.
இந்த சந்திப்பு பெலவத்தையிலுள்ள ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான கூட்டணி கைப்பற்றியமை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். அத்துடன், இது குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நாட்டின் நிர்வாகத்தில் உள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் நாடுகளிடையே ஒற்றுமையை பேணுவது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி ஜானக அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
