(கனகராஜா சரவணன்)
இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர், அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும். பொது இடத்தில் அமைக்க கூடாது. கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார்.
ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் நடைபெற்று வரும் பல சட்டவிரோத செயற்பாடுகள் அதற்கான காரணங்களையும் மிக விரைவில் இந்த அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்பதுடன் அந்த குற்றத்தை செய்த குற்ற வாளிகளுக்கான தண்டனையை வழங்கப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அதே நேரத்தில் இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காது இருப்பதற்கான ஒரு நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
அதேவேளை இலங்கை தமிழரசு கட்சி மறைந்த முன்னாள் தலைவர் இரா.சம்மந்தனுக்கு உருவ சிலை அமைப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றது என்பதை அறிந்துள்ளேன். எனவே அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது.
இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதனுக்கு கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது. அவ்வாறு பொது இடத்தில் அமைக்கும் பட்சத்தில் நாங்கள் எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன் அதனை அகற்றுவதற்கான முழு முயற்சியை மேற்கொள்வோம்.
அதேவேளை இது வன்முறை மிரட்டல் அச்சுறுத்தல் என சொல்வதற்கு முன்னரே இதனை நாங்கள் அறிவிக்கின்றோம். இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக் கொள்கிறேன். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
