உத்தியோகபூர்வ ‘GovPay’ இணையதளத்தை ஒத்த வகையில் போலியான இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களிடமிருந்து பணம் மோசடி செய்யப்பட்ட பல சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர் .
அரச சேவைகளுக்கான டிஜிட்டல் பணப்பரிமாற்ற வசதிகளை மேற்கொள்வதற்காக ‘GovPay’ செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் விதிக்கப்படும் அபராதப் பணத்தைச் செலுத்துவதற்கும் இந்தச் செயலி மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையைச் சாதகமாக்கிக்கொண்டு, உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலியான தளங்களை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றிப் பணம் மோசடி செய்த பல சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிவேகமாகச் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, அதற்கான அபராதப் பணத்தைச் செலுத்துமாறு பொலிஸாரின் பெயரில் பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்திகள் (SMS) அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான போலி குறுஞ்செய்திகள் மூலம் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர் .
போக்குவரத்து விதிமீறல்களின் போது பொலிஸார் அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டி அபராதப் பத்திரத்தை மாத்திரமே வழங்குவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும் கூட, குறுஞ்செய்திகளை அனுப்பி வங்கி கணக்கு விபரங்களை பொலிஸார் ஒருபோதும் கோர மாட்டார்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
