சபரிமலை ஐயப்பன் ஆலய பகுதியில் வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் உலங்குவானூர்தி ஆலய வளாகத்துக்கு மிக அருகில் தாழ்வாகப் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகப் பம்பா காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மதியம் 1:30 அளவில், கொச்சி கடலோர காவல்துறைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று சபரிமலை சந்நிதானத்தின் கொடி மரம் அருகே மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள கடலோர காவல்படை தலைமையகம், வழக்கமான பயிற்சியின் போது மோசமான காலநிலை காரணமாக உலங்குவானூர்தி திசை மாறியதாகவும், அதனால் பாதுகாப்பிற்காகத் தாழ்வாகப் பறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் கடலோர காவல்படையின் இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை எனத் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், சபரிமலை மற்றும் அதன் வளாகம் மாநில அரசால் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், வானிலை மாற்றத்தினால் தாழ்வாகப் பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தால் அது குறித்து காவல்துறைக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ முன்கூட்டியே எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், முன்னறிவிப்பின்றி இவ்வாறு பறந்தமை பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய செயலாகக் கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது பொதுப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தெரிந்தே செய்ததற்காக, கேரள காவல்துறைச் சட்டத்தின் பிரிவு 118(e)-ன் கீழ் பம்பா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
