பூமத்திய ரேகை பசுபிக் பகுதியில் வேகமாக அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையால், 2026 ஆம் ஆண்டு மே-ஜூலை மாதங்களிலேயே எல் நினோ நிலைமைகள் மீண்டும் ஏற்படக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட சமீபத்திய மாதாந்திர உலகளாவிய பருவகால காலநிலை அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்கனவே உரத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, இந்த காலநிலை மாற்றம் பேரிடியாக அமையும் எனக் கருதப்படுகிறது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, வடக்கு அரைக்கோளத்தின் கோடைகாலத்தில் எல் நினோ உருவாவதற்கான வாய்ப்பு 70 சதவீதமாக உள்ளது. இது ஆண்டின் இறுதி வரை நீடிக்கக்கூடும் என சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இந்தியா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இயல்பை விடக் குறைவான பருவமழையை எதிர்பார்க்கிறது.
அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்கனவே கடுமையான வெப்ப அலைகள் வீசத் தொடங்கியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் ‘Meteomatics’ நிறுவன வானிலை நிபுணர் கிறிஸ் ஹைட் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலநிலை மாற்றங்களுக்கு மேலதிகமாக, ஈரான் போர் காரணமாக உலகளாவிய யூரியா வர்த்தகத்தில் 30 சதவீதத்தைக் கையாளும் ‘ஹோர்முஸ்’ நீரிணையூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உர விநியோகம் தடைப்பட்டு விலையும் அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக அவுஸ்திரேலிய விவசாயிகள் கோதுமை உள்ளிட்ட பயிர்ச்செய்கையை ஏற்கனவே மட்டுப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம், வறண்ட வானிலை காரணமாக பாம் எண்ணெய் உற்பத்தி 5 முதல் 12 சதவீதம் வரை குறையக்கூடும் என மலேசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
