22 பௌத்த பிக்குகள் 110 கிலோகிராம் போதைப் பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சரித்திரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த மிகப் பெரும் போதைப் பொருள் கடத்தல் முயற்சியாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு திரும்பிய 22 பௌத்த பிக்குகளின் பயணப் பைகளை சோதனையிட்ட போது ஒவ்வொரு பௌத்த பிக்குவின் பயண பையிலிருந்தும் சுமார் 5 கிலோகிராம் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருட்களில் ‘குஷ்’ மற்றும் ‘ஹஷிஷ்’ உட்பட 110 கிலோகிராம்களுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் காணப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி 110 கோடி ரூபாய்க்கு அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த பிக்குகள் குழு கடந்த 22 ஆம் திகதி தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. அங்கு சாதாரண உடைகளில் அவர்கள் அங்கு நடமாடியுள்ளனர். அவை தொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் என்பன பிக்குகளின் கைத்தொலைபேசிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
